சூலூர்: சூலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம், 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தி. இவரது கணவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மற்றொரு மகள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். நித்தியானந்தி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் நித்தியானந்தி தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகை, பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் நித்தியானந்தி வெளியே வராததால், பக்கத்து வீட்டுகாரர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நித்தியானந்தி வாயை துணியால், கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர் கட்டை அவிழ்த்துவிட்டு விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை நித்தியானந்தி அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று நித்தியானந்தியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம், நகை பறித்து சென்ற சம்பவம் செஞ்சேரிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.