புதுடெல்லி :குறைந்தபட்ச ஆதார விலைக்காக போராடும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் எம்பி ராகுலகாந்தி ஆதரவு தெரிவித்தள்ளார். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் இன்று (பிப். 13) டெல்லி நோக்கி அணிவகுத்து செல்ல அழைப்பு விடுத்தன. அதன்படி விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து இன்று காலையில் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் – ஹரியாணா, ஹரியாணா – டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பகுதிளில் சிமென்ட் தடுப்புகள், முள்படுக்கை, முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன.விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர்.மேலும் பல விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருட்ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நாட்டின் 15 கோடி விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும். நீதிக்கான காங்கிரஸ் பயணத்தில் இது முதல் உத்தரவாதம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், “எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்துள்ள ஒன்றிய அரசு, அவரது பரிந்துரையை செயல்படுத்தவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க பரிந்துரைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்தியா கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.