சென்னை; விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ அளவுக்கு அதி கனமழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை காலத்துக்கு பிறகு கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. மேலும் வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சில இடங்களில் மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று நள்ளிரவு பெய்ய தொடங்கிய கனமழை காலை வரை நீடித்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ அளவுக்கு அதி கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு-21 செ.மீ, முகையூர் – 20 செ.மீ, கெடார்- 15 செ.மீ மழை பெய்துள்ளது. வேலூரில் 9 செ.மீ மழையும், முண்டியம்பாக்கத்தில் 8 செ.மீ மழையும் பெய்துள்ளது. மரக்காணத்தில் 6 செ.மீ மழையும், ஆனந்தபுரத்தில் 6 செ.மீ மழையும் பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் 7 செ.மீ மழையும், அரியலூரில் 5 செ.மீ மழையும், திருக்கோவிலூரில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.