சென்னை: சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆபரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் நேற்று மாலை சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ‘‘இதுவரை சூடான் நாட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 247 பேர் ஒன்றிய, மாநில அரசுகளின் உதவியுடன் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.300க்கும் மேற்பட்டவர்கள் சூடானில் இருந்ததாக தகவல் கிடைத்தது. அவர்களில் 247 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது’’ என்றார்.