சென்னை: குரூப் 1 மெயின் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் மூலச்சான்றிதழ்களை வரும் 8ம் தேதி முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் (குரூப் 1 தேர்வு) அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்து தேர்வுக்கு (மெயின் தேர்வு) தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை (அரசு வேலை நாட்களில்) மாலை 5.45 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும்.
அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் வருகிற 15ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களை குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.