திருமலை: தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் ஜன்னாரம் மண்டலம் பொங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெடுலு மற்றும் போசம்மா தம்பதியின் மகன் பிரவீன். பெடுலு கொத்தனாராகவும், போசம்மா பீடித் தொழிலாளியாகவும் உள்ளனர். இவர்களது மகன் பிரவீனை தம்பதிகள் இருவரும் கடுமையாக உழைத்து படிக்க வைத்தனர். அதன் மூலம் எம்.காம், பிஎட்., எம்.எட் படிப்புகளை உஸ்மானியா பல்கலைகழகத்தில் படித்து முடித்தார்.
பிரவீன் தனது பெற்றோருக்கு சுமையாகவும் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதற்காக உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மல்டிமீடியா ஆராய்ச்சி மையத்தில் இரவுக் காவலராகப் பணியாற்றி வந்தார். இரவு காவலாளியாக பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்வுகளுக்கு தயாராகி தேர்வு எழுதினார். இதன் மூலம் பிரவீனுக்கு 10 நாட்களில் அடுத்தடுத்து மூன்று அரசு வேலை கிடைத்தது. சமீபத்தில் தெலங்கானா குருகுல வித்யாலயா வாரியம் அறிவித்த முடிவுகளில் பட்டதாரி ஆசிரியர்,முதுகலை ஆசிரியர், ஜூனியர் லெக்சரர்ஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோன்று கேசமுத்திரத்தை சேர்ந்த காகத்தி ஜோதி மற்றும் நவீன் தம்பதியினர் 2018ம் ஆண்டு முதல் சாலையோரம் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். ஓட்டலில் கணவருக்கு உதவியாக இருக்கும் போதே காகத்தி ஜோதி எம்.ஏ மற்றும் பிஎட் படிப்புகளை முடித்தார். இவருக்கு, பட்டதாரி ஆசிரியர்,முதுகலை ஆசிரியர் பணிகள் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது.