சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கட்டணம் இல்லா கல்வி சுற்றுலாவாக துபாய் செல்லவுள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ‘விங்ஸ் டு பிளை’ என்ற தன்னார்வலர் அமைப்பு மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் ஆய்வு, திறன் வளர்ச்சி ரீதியான போட்டிகளை நடத்துகின்றனர்.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அமெரிக்க, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுகின்றனர். 2022ம் ஆண்டு 2023ம் கல்வி ஆண்டில் தொழில் முனைவோர் திறன் மேம்பாடு என்ற தலைப்பில் புதிய யோசனைகளை செயல் அறிக்கையாக சமர்ப்பிக்க மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன, சுமார் 10,000 மாணவர்கள் பங்கேற்று நடைபெற்ற நுழைவு தேர்வில் 478 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல நிலைகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் இறுதி சுற்றுக்கு தேர்வானவர்களை 9 மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கபப்ட்டிருந்தனர்.
இந்த மாணவர்கள் திறமையை ஊக்குவிக்கும் வகையில் உணவு, தங்குமிடம், விமான பயணம் உள்ளிட்டவற்றிற்கு 1 ரூபாய் கூட கட்டணமில்லாமல் 5 நாட்கள் துபாய் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த மாணவர்களை நேரில் சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா நினைவு பரிசு மற்றும் ஊக்க தொகை அளித்து பாராட்டினார்.
முதல் முறையாக விமானத்தில் பறக்கப்போகும் உற்சாகத்துடன் துபாயில் உள்ள முக்கிய இடங்களான புர்ஜ் காலிஃபா, துபாய் பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட உள்ளதாகவும் பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்யவுள்ளதாவும் கண்களில் ஆச்சிரியம் குறையாமல் விவரிக்கிறார்கள் இந்த மாணவர்கள். கல்வி அறிவும் விடாமுயற்சியுடன் கூடிய தன்னமிக்கையும் இருந்தால் துபாய் என்ன நிலவிற்கும் செல்ல முடியும் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி மாணவ செல்வங்கள்.