தர்மபுரி: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்ற மாணவன் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 10 வயது மகன், அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். பங்குனி உத்திரத்திற்காக, முருகன் கோயிலுக்கு செல்ல சிறுவன் மாலை அணிந்திருந்தான். நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மாயமானான்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்த்து விசாரித்ததில், சிறுவனின் பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன் மகன் இளங்கோ (19), சிறுவனை அழைத்துச் சென்றதும், திரும்பி வரும் போது அவன் மட்டும் தனியாக வந்ததும் தெரியவந்தது. இளங்கோவும் சிறுவன் படித்து வரும் அதே பள்ளியில், பிளஸ்2 படித்து வருகிறான்.
இதையடுத்து இளங்கோவை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சம்பவத்தில் ஈடுபட்ட இளங்கோவுக்கு, செல்போனில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) சிறுவனை மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளான்.
இதற்கு அந்த சிறுவன் மறுத்ததுடன், தனது தாயிடம் தெரிவிப்பேன் என்றதால், பயந்து போன இளங்கோ, சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளான். இளங்கோ பிளஸ்2 படித்தாலும் அவனுக்கு வயது 19 ஆகிறது. அதை சான்றிதழ் மூலம் உறுதி செய்துள்ளோம். எனவே, கைது செய்துள்ள அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்,’ என்றனர். இதையடுத்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.