கோவை: டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவர் பலியானார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வெம்பூர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி பாண்டியன் (42). இவரது மனைவி மீனாட்சி (36). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும், 10 வயதில் மோனீஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி பாண்டியன் கோவை சிங்காநல்லூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
மோனீஷ் சிங்காநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் மோனீசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர். சிறுவனை பரிசோதித்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மோனீஷ் உயிரிழந்தார்.