திண்டுக்கல் : தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் ஏராளமானவர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மேலும் பாதயாத்திரை பக்தர்கள், ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் வந்திருந்தனர்.
ஆங்கல புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக மலைக்கோயிலில் சுற்றுவட்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனத்திற்கு சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதேபோல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு திரண்டனர். எனவே, அதிகாலை கோயில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதையொட்டி, அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோயில்கள் மட்டுமின்றி தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் திருப்பலி மேடையில் வைத்திருந்த திருவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். இதையடுத்து புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கை நடந்தது.
பின்னர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் ஏராளமானோர் திரண்டு கடலில் குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.
இதேபோல் மதுரை, நெல்லை, திருசெந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலங்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.