சென்னை: மாமல்லபுரத்தில் வரலாறு காணாத வகையில் பலத்த கடல் சீற்றத்தால், 30 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி சென்ற கடல் தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், சில மீனவர்கள் மட்டுமே கடலுக்கு செல்கின்றனர். படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரை பகுதியில் கயிறு கட்டி நிறுத்தி உள்ளனர். கடலுக்கு செல்லாத மீனவர்கள் சிலர் கரையில் நின்று மீன்பிடித்தனர். ஒரு சிலர், கடலுக்கு போகாமல் தங்களது படகு மற்றும் மீன்பிடி வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகே நேற்று மதியம் வரலாறு காணாத பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், கரையில் இருந்து 30 மீட்டர் தூரம் கரையை கடந்து தண்ணீர் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள், மாலையில் கடற்கரைக்கு சென்று பொழுதை கழிக்க திட்டமிட்டனர். அப்போது, பலத்த கடல் சீற்றத்தை கண்டு, அங்கும் இங்கும் பயத்துடன் ஓடியதை காண முடிந்தது. மேலும், கடலில் குளிக்க முயன்றவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் தடுத்து நிறுத்தி, கொந்தளிப்பாக உள்ளது யாரும் குளிக்கக் கூடாது என திருப்பி அனுப்பினர்.
கடலுக்கு சென்ற மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பினர். மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகே நேற்று மதியம் வரலாறு காணாத பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மாமல்லபுரத்தில் அடிக்கடி பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால், கடல் அரிப்பை தடுக்கவும், பேரிடர் காலங்களில் மீனவர்களை பாதுகாக்கவும் மீன்வளத் துறை அமைச்சரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து, தூண்டில் வளைவு அமைத்து மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என கூறினர்.