Monday, June 3, 2024
Home » வயிற்றுப்பசியை போக்கிவிட்டால், அறிவுப்பசியை தீர்த்து கொள்ளலாம்: சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வயிற்றுப்பசியை போக்கிவிட்டால், அறிவுப்பசியை தீர்த்து கொள்ளலாம்: சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Mahaprabhu

சென்னை: மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது என்று மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த வரிசையில்தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி என்ற திட்டத்தை கொண்டு வந்தோம் என்று சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடந்த சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்களை பார்க்கும்போது என்னுடைய பள்ளி நினைவுகள் தான் வருகிறது.

மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளி பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது. சமத்துவ இந்தியாவை பேணி காக்க வேண்டிய பெரும் பொறுப்பு, நாட்டின் எதிர்காலமான மாணவர்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. எல்லோருக்குமான இந்தியாவை உருவாக்க நினைத்த முன்னாள் பிரதமர் நேரு பெயரில் உள்ள ஸ்டேடியத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. கல்வித்துறையில் திராவிட மாடல் ஆட்சி மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் மறுமலர்ச்சி. இந்தியாவில் அனைத்திலும் நம்பர் ஒன் தமிழ்நாடு என்று பேசும் அளவுக்கு வளர்ந்து வருகிறோம். நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, என்னும் எழுத்தும் திட்டம், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த வரிசையில் தான் மாணவர்களை நல்வழிப்படுத்த சிற்பி என்ற திட்டத்தை கொண்டு வந்தோம்.

IAS, IPS பணிகளுக்கு வழங்கும் பயிற்சியை மாணவர்களுக்கும் வழங்கியுள்ளோம். மாணவர்கள் படிப்பில் முதலிடத்தை பிடிப்பது போல, ஒழுக்கத்திலும் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் சிற்பி திட்டம் தொடங்கப்பட்டது. வயிற்றுப்பசியை போக்கிவிட்டால், அறிவுப்பசியை தீர்த்து கொள்ளலாம். அதை மனதில் வைத்தே காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகளில் தலா 50 மாணவர்களை வைத்து சிற்பி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 5000 மாணவர்கள் சிறந்த சீர்மிகு சிற்பிகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். கராத்தே, போக்குவரத்துக்கு விதிமுறைகள், நல் ஒழுக்கங்கள் ஆகியவை சிற்பி திட்டத்தின் கீழ் கற்று கொடுக்கப்படுகிறது. சிற்பி திட்டம் மாணவர்களையும், அவர்களது குடும்பத்தையும் மற்றும் சுற்றத்தையும் சீர்மைப்படுத்தும்.

சமூகத்தின் பாடத்தை படிப்பதன் மூலம் சுயமரியாதை, பகுத்தறிவை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்றும் படிப்பு மட்டுமே பிரிக்க முடியாத சொத்து என்பதால், படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்தார். மேலும், போதை பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாக கூடாது. உங்கள் நண்பர்களையும் தடுக்க வேண்டும். போதைபொருளற்ற சமூகத்தை உருவாக்க மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். போதையேற்ற சமூகத்தை உருவாக்க மாணவர்கள் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். போதை என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு எனவும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi