சென்னை: தருமபுரி, நீலகிரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவில் பரவலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, விழுப்புரம், கரூர் உள்பட தமிழ்நாட்டில் பரவலாக இரவில் கனமழை பெய்தது. ஒசூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இரவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
குளித்தலை, தண்ணீர்பள்ளி, மருதூர், பணிக்கம்பட்டி, அய்யர்மலை, லாலாபேட்டையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, நீலகிரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.