Friday, May 17, 2024
Home » ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி

by Dhanush Kumar

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட முடியாது என நேற்றைய விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘‘தாமிரம் என்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது. அது கச்சா எண்ணெயை போன்றதாகும். எனவே இந்த உற்பத்தியை முடக்க வெளிநாட்டு சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியே இந்த ஆலை மூடல் போராட்டம் ஆகும். எனவே உச்ச நீதிமன்றம் எங்களது இந்த வாதங்களை கருத்தில் கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி, ‘‘ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீறியுள்ளது. இதேப்போன்று ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் ஜிப்சம், தாமிர கழிவுகள் அகற்றப்பட்டதாக தவறான தகவல்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் 5.3 லட்சம் மெட்ரிக் டன் தாமிரம், ஜிப்சம் கழிவுகளை இந்த ஆலை 11 இடங்களில் கொட்டியுள்ளது. அதிலும் ஒரு ஆற்றுப்படுகையில் கொட்டி அதனை மாசு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடி ஆறு ஆண்டுகள் ஆகிறது. இப்போது ஆலையை சுற்றியுள்ள பகுதிகளிர் நிலத்தடி நீர் மாசுவில் இருந்து முன்னேற்றம் அடைந்துள்ளதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு வழக்கறிஞர், ‘‘நிலத்தடி நீர் மாசுவில் முன்னேற்றம் இல்லை. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மாசுவில் இருந்து முன்னேற்றம் அடைய பல ஆண்டுகள் ஆகும். குறிப்பாக மழையின் அளவு அதிகரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகள், அவர்களின் அச்சங்களை கண்டிப்பாக தவிர்த்து விட முடியாது. அதேப்போன்று அப்பகுதி மக்களின் நிலையையும், அவர்களின் கருத்துக்களையும் ஒதுக்கி வைக்க முடியாது. ஏனெனில் மக்களின் நலன் மிக முக்கியமானது ஆகும். இருப்பினும் ஆலை எதிர்ப்பு விவகாரத்தில் அப்பகுதியை சார்ந்த அனைத்து மக்களும் நீதிமன்றம் வர இயலாது. இதில் குரலற்றவர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாக உள்ளது. மேலும் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு விவகாரத்தை வெகு எளிதாக புறந்தள்ளி விட முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என கருதியே அனைத்து பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்து ஆலையை இயக்கும் விதத்தில் நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற மனநிலை உச்ச நீதிமன்றத்திற்கு இருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் இருக்கும் பிரச்னையை தற்போது கருத்தில் கொண்டால் நேரடியாக ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட முடியாது. இதில் சிகப்பு வகையை சேர்ந்த ஒரு நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அனைத்து விவகாரத்தையும் திருப்திப்படுத்த வேண்டும். அதன் பின்னர் தான் எந்த இறுதி முடிவையும் எடுக்க முடியும்’’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi