Tuesday, May 21, 2024
Home » இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

சென்னை: கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளதால் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 22ம் தேதி கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, 1974ல் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நேற்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை குறித்து தீர்வு காண ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார். ஒன்றிய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கிறது என்று கேள்வி எழுப்பி, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi