மதுரை: இலங்கை மத்திய மாகாணம், லூவராகினியா மாவட்டம், தளவாய்க்கிளை பகுதியை சேர்ந்தவர் உமாவதி (35). இவர் மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் 6வது தெருவை சேர்ந்த பிரதாப் குமாரை திருமணம் செய்து இங்கேயே வசித்து வருகிறார். இவர் கணவரின் அடையாளத்தை அடிப்படையாக கொண்டு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் பெற்று உள்ளார். நேற்று முன்தினம் உமாவதி, இந்திய பாஸ்போர்ட்டுடன் இலங்கை செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோது, குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், இலங்கை தமிழில் பேசியதால், சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது தாய் மாமா மகனான மதுரையை சேர்ந்த பிரதாப் குமாரை திருமணம் செய்ததும், கடந்த 3.2.2016ல் இலங்கை விசா மூலம் இந்தியா வந்தவர் தொடர்ந்து கணவருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இலங்கை குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்று இந்திய பாஸ்போர்ட்டையும் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து உமாவதியை போலீசார் கைது செய்தனர்.