கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக 3வது நாளாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது.
அதே போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணை அணை 49 அடியை எட்டியுள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணை 11 அடியாகவும், சிற்றாறு 2 அணை 11 அடியாகவும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 650 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 வது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.