திருவள்ளூர்: சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற 10வது ஆண்டு விளையாட்டு தினவிழா நிகழ்ச்சியில் இந்திய குத்துச்சண்டை வீரர் வெங்கடேசன் தேவராஜன் பங்கேற்றார். பூந்தமல்லி அடுத்த திருவேற்காட்டில் உள்ள சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் 10வது ஆண்டு விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் சரஸ்வதி தசரதன் முன்னிலை வகித்தார். முதல்வர் மது அனைவரையும் வரவேற்றார். இந்த விளையாட்டு தினத்தில் நடத்தப்பட்ட 72 நிகழ்ச்சிகளில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை மொத்தம் 673 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது படை அணிவகுப்பு, யோகா, பிரமிட் உருவாக்குதல், தேசியக்கொடி உருவாக்குதல் மற்றும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர்கள் அரங்கேற்றினர். இந்த விழாவில் இந்திய குத்துச்சண்டை வீரரும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான வெங்கடேசன் தேவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.