Thursday, May 9, 2024
Home » ஆன்மீகத்தை வைத்து தில்லுமுல்லு செய்து வருகிறது ஒன்றிய அரசு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

ஆன்மீகத்தை வைத்து தில்லுமுல்லு செய்து வருகிறது ஒன்றிய அரசு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

by MuthuKumar
Published: Last Updated on

பெரம்பூர்: ஆன்மீகத்தை வைத்துகொண்டு பாஜக அரசு தில்லுமுல்லு செய்து வருகிறது என கொளத்தூர், ஓட்டேரியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பிலும், சென்னை கிழக்கு மாவட்ட திருவிக நகர் தெற்கு பகுதி திமுக சார்பிலும் இந்திய கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கொளத்தூர் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி மற்றும் திருவிக நகர் பகுதி செயலாளர் சாமிகண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:வரும் தேர்தலில் வாக்கு சதவீதத்தின் பதிவை கூடுதலாக்கும் பொறுப்பு பாகமுகவர்களுடையது. கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிகபடியான வாக்குகளை நாம்பெற வேண்டும். இயக்கத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் பாகமுகவர்கள். இந்தியா கூட்டணி அனைத்திலும் முந்திக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1520 கோயில்களுக்கு குடமுழுக்கு 34 மாதத்துக்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 6,020 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் 18 இடங்கள் பாஜகவினரின் நிலங்கள். தமிழ்நாடு அரசியலில் திமுகவிற்கு இணையாக முதல் இடத்தில் யாரும் போட்டியிட வில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீக பயணமாக இந்து சமயஅறநிலைத்துறை சார்பில் 300 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். ஆன்மீகத்தை வைத்துகொண்டு பாஜக தில்லுமுல்லு செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,’பிஜேபி தமிழர் விரோத ஆட்சி. சுதந்திரத்துக்கு பிறகு அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களையே பொதுநிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தி வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தமிழர்களை தவிர்த்து வடமாநிலத்தவர்கள் பொதுநிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக அரசு வீணாக்கி வருகிறது.

இந்தியாவின் பெருமை வேற்றுமையில் ஒற்றுமை. இந்த பெருமைகளை பிஜேபி அழித்து வருகிறது. சிஏஏ சட்டத்தின் வாயிலாக நமக்கு துரோகம் செய்தது ஒன்றிய அரசு. இதற்கு துணைபோனது அதிமுக. இந்தியாவின் சொத்துக்களை மோடி விற்று வருகிறார். ஏழ்மை மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறவைத்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பாஜகவை முழுவதுமாக விலக்க முடியும்’என்றார்.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi