திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே செவி திறன், பேசும் திறன் இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மூலம் பேசும் திறனை ஏற்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திண்டுக்கல்லில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே செவித்திறன் மற்றும் பேசும் திறனை இழந்த குழந்தைகளுக்கான தனி சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் முதல் கட்டமாக தேர்தெடுக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம், பழனி, நாடிக்கொம்பு, நிலக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 10 குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டால் அவர்கள் குணமாகி விடுவார்கள் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதை அடுத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கான ரூ.7 லட்சம் செலவையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அரசே ஏற்ற நிலையில் 10 குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் 10 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். குழந்தைகள் அனைவரும் பேச கற்றுவரும் நிலையில் பயிற்சி மூலம் ஓராண்டில் சரளமாக பேசி தொடங்கிவிடுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.