சென்னை: புயல், வெள்ளத்தால் சான்றிதழ்கள், அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அதனை மீண்டும் பெற நாளை முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில், மிக்ஜாம் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் 1 முதல் 15 வரை உள்ள 46 பகுதி அலுவலகங்களில் நாளை (டிச.12ம் தேதி) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கிறது. சிறப்பு முகாம்கள் நாளை தொடங்கி, தினம்தோறும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்தந்த வார்டுகளுக்கு உரிய பகுதி அலுவலங்களில் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.