சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை தமிழ்நாடு அரசு பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அனைவருக்கும் வீடு கிடைக்க செய்வது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அதற்காக வீடுகளின் விலை குறைவாக இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.
ஆனால், வழிகாட்டி மதிப்பை விருப்பம் போல உயர்த்தியிருப்பதன் மூலம் வீடுகளின் விலைகள் உயரவே அரசு வழிவகுத்திருக்கிறது. இதன்மூலம் நடுத்தர மக்களின் சொந்த வீட்டு கனவு சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும் அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வீட்டு வசதித் துறையில் சீர்திருத்தம் செய்வதன் மூலம் ஏழை மக்களும் சொந்த வீடு வாங்கும் சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.