கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், சின்ன காலனி, வலம்புரி நகர், அம்பேத்கர் நகர், காந்திநகர், இருளர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் காலனி பகுதியில் எந்த ஒரு ஆவணமும் இல்லாத பழங்குடியின மக்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வழங்க ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினி வாசு முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர், இருளர்களுக்கு ஜாதி சான்றுகளை வழங்கினார். இதில் இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் குறித்து பதிவு செய்தனர். இதில் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, வட்ட வழங்கல் அலுவலர் திலகம், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.