திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களது 2 வயது ஆண் குழந்தை திருமூர்த்தி, கடந்த 17ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையை காணவில்லை.
இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து 4 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் துர்நாற்றம் வீசி உள்ளது.
சந்தேகத்தின்பேரில் ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் குழந்தை திருமூர்த்தி சடலமாக இருந்தது தெரியவந்தது.
போலீசார் வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை எப்படி இறந்தது, ஸ்பீக்கர் பாக்ஸில் சடலம் வந்தது எப்படி என்று விசாரணை நடக்கிறது.