சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை வரும் 3ம் தேதி இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் யோக நரசிம்மர் அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலுக்கு கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
முதியவர்கள் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக இக்கோயிலில் கடந்த மார்ச் 8ம் தேதி ரோப் கார் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ரோப் கார் வசதி மக்களிடையே பெரிதும் ஈர்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் 3ம் தேதி ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை இயங்காது. 4ம் தேதி முதல் ரோப்கார் சேவை வழக்கம்போல் இயங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.