கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டின் அநேக மாதங்களும் சுற்றுலாப்பயணிகளின் வருகை இருக்கும். குறிப்பாக கோடை சீசன், வார விடுமுறை, தொடர் விடுமுறை காலத்தில் தினமும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளில் ஒரு பகுதியினர் முழு ஆண்டு தேர்வை எழுதி முடித்து விட்டு விடுமுறையில் உள்ளனர். மேலும், வெயில் கொளுத்தி எடுப்பதாலும், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
இவர்கள் முக்கிய சுற்றுலா இடங்களான தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் சென்றும் மகிழ்ந்தனர். வரும் வாரங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.