Wednesday, May 22, 2024
Home » சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்

சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்

by Karthik Yash

* 36 மி.யூ என்பது 2023ல், ஒரு நாளில் நுகரப்பட்ட அதிகபட்ச சூரிய சக்தி

சென்னை: தமிழ்நாடு நேற்று முன்தினம் 40.50 மில்லியன் யூனிட் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் மின் தேவையும், மின்சார பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்.18ம் தேதி மாநிலத்தின் மின் தேவை 20,341 மெகாவாட்டாகவும், மின்சார பயன்பாடு 448.21 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. எனினும் சீரான மின் விநியோகத்திற்காக தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியுடன் கூடுதலாக மத்திய தொகுப்பு, தனியார் கொள்முதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதேசமயம் கோடை காலத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி பெரும் பங்கை வகிக்கிறது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தின் மின்சார பயன்பாடு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 23ம் தேதி 441.364 மில்லியன் யூனிட்கள் நுகரப்பட்டது. இதில் சூரிய சக்தி ஆற்றல் மட்டுமே கிட்டத்தட்ட 10 சதவீதம் (40.50 மி.யூ) பூர்த்தி செய்தது. தெளிவான வானம், நீடித்த பகல் நேரம் மற்றும் சூரிய சக்தி நிறுவு திறன் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அதிக சூரிய ஆற்றல் உற்பத்தி சாத்தியமானது. இருப்பினும், நேற்று முன்தினம் 5,365 மெகாவாட் உற்பத்தி இருந்தது. ஆனால், உச்சபட்ச சூரிய சக்தி உற்பத்தி கடந்த மார்ச் 5ம் தேதி 5,398 மெகாவாட் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ல், 36 மி.யூ என்பது ஒரு நாளில் நுகரப்பட்ட அதிகபட்ச சூரிய சக்தி. இந்த ஆண்டு சூரிய சக்தியின் நிறுவு திறன் 1,265 மெகாவாட் உயர்ந்துள்ளது, இதன் விளைவாக அதிக சூரிய மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, ​​தமிழகத்தில் சூரிய மின்சக்தியின் மொத்த நிறுவப்பட்ட திறன் 7394.45 மெகாவாட்டாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாநிலத்தின் மின்சார பயன்பாடு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக உள்ளது.

You may also like

Leave a Comment

15 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi