பெரம்பூர்: மாமா என்று அழைக்கவேண்டும் என்று கூறி, இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 23 வயது பெண், பெற்றோருடன் வசித்து வருகின்றார். இவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். நேற்று காலை 7 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு அங்குள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர், அந்த இளம்பெண்ணிடம் சென்று, ‘’தன்னை மாமா’’ என்று கூப்பிட வேண்டும் என்று கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், அவரிடம் இருந்து விலகி வேகமாக செல்ல முயன்றபோது பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொடுங்கையூர் விவேகானந்தர் நகர் அப்பர் தெருவை சேர்ந்த மிர்தெஞ்சன் (எ) மாதேஷ் (23) என்பவரை கைது செய்தனர்.
இதன்பின்னர் அவரை எம்கேவி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் மாதேஷ் பணியாற்றி வருகின்றார் என்பது தெரிந்தது. இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.