* போண்டா மாவுடன் சிறிது சீஸ் துருவல் சேர்த்து போண்டா செய்தால் மிருதுவாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும். போண்டா நன்கு உப்பி, பெரிதாகவும் வரும்.
* சேமியா பாயசம் நீர்த்து விட்டதா! கொஞ்சம் நூடுல்ஸை சூடான நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து வடித்து அந்த நீரை பாயசத்துடன் கலந்தால் கெட்டியாகும். மனமும், சுவையும் நன்றாக இருக்கும்.
*பனீர் தயாரிக்க கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாற்றுக்கு பதிலாக தயிர் சேர்த்தால் கூடுதலாக பனீர் கிடைக்கும்.
* இரண்டாவது முறை அரிசி களைந்த நீரில் பருப்பை வேக வைத்தால் சாம்பார் நல்ல ருசியாக இருக்கும்.
*சுக்கை வறுத்துப் பொடி செய்து சலித்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தயிர் சாதம் ஊட்டும்போது சிட்டிகை கலந்தால், புளிப்புத் தட்டாமல் எளிதில் ஜீரணமாகும்.
* காய்கறிகளை நறுக்குவதில் கூட உணவிற்கு சுவை ஏற்படும். உதாரணமாக கத்திரிக்காயை சாம்பாரில் நீளமாக அரிந்து போட வேண்டும். காரக் குழம்புக்கு நீளவாக்கில் நறுக்கி, பின் குறுக்காக நறுக்கிப் போட வேண்டும்.
* வேகவைத்த மரவள்ளிக் கிழங்கின் ரோஸ் நிற தோலை தூக்கி எறியாமல், அதில் உப்பு, மிளகாய் தூள் தடவி, வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்தால் வித்தியாசமான சிப்ஸ் ரெடி.
* மாவடு ஊறுகாய் போட தயாராகி விட்டீர்களா? அதில் சிறிது விளக்கெண்ணெய் விட்டால், பூச்சிகள் அண்டாமல், நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும்.
*சமையலுக்கு பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை மட்டும் உபயோகித்தால் மணம் சீராக இருக்கும். பெருங்காயமும் குறைவாக
செலவாகும்.
* கீரை மசியல் செய்யும் போது, சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசிக்க நன்கு குழைவாக மசிக்கலாம்.
*ஒரு முழு உருளைக்கிழங்கை தோல் சீவி காற்று புகாத பாத்திரத்தில் ரொட்டியுடன் வைத்து மூடினால், ரொட்டி ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும். ஆனால் ஒரு கண்டிஷன். உருளைக்
கிழங்கை இரண்டு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
*கோதுமை அல்வாவுக்கு பால் எடுத்தபிறகு மிஞ்சும் ரப்பர்போன்ற சக்கையை வேஸ்ட் பண்ண வேண்டாமே. அதை ஆவியில் வேகவைத்து உதிர்த்து, கொஞ்சம் கடலைமாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு கலந்து பிசறி துக்கடாவாக எண்ணெயில் பொரித்து எடுத்தால் புது வித பக்கோடா ரெடி.
– அண்ணா அன்பழகன்