புதுடெல்லி: ஒன்றிய ஆயுதப்படை காவலர்கள், தேசிய பேரிடர் படையினருக்கு சிறுதானிய வகை உணவுகள் வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.ஐநா பொதுசபை அதன் 75வது ஆண்டான 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது.
சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கும் விதத்தில் ஐநா 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒன்றிய ஆயுதப்படை காவலர்கள் (சிஏபிஎப்), தேசிய பேரிடர் படையினர் (என்டிஆர்எப்) வீரர்களுக்கு 30 சதவீதம் சிறுதானிய உணவு வகைகள் வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து தரப்பு படை வீரர்களுடனும் விரிவாக கலந்து ஆலோசித்த பின்னரே அவர்களின் உணவில் 30 சதவீதம் சிறுதானிய வகை உணவுகளை சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.