பெங்களூரு : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீது 2018ல் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத பணம் ரூ. 9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வருமான வரித்துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. 2018-ல் பதிவுசெய்த வழக்கில் டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.சம்மனை ரத்து செய்யக் கோரி டி.கே.சிவகுமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, டி.கே.சிவகுமார் மீது 2018ல் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கூட்டுச்சதி என்ற புகாரை மட்டுமே வைத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அமலாக்கத்துறையின் மறுஅய்வு மனு நிலுவையில் உள்ளதால், அதனை மேற்கோள்காட்டி இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.
மேலும் டிகே.சிவக்குமாரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இது டி.கே.சிவக்குமார் தரப்பிற்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த உத்தரவால் அமலாக்கத்துறை பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனிடையே சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2019ம் ஆண்டு சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்து 50 நாளுக்கு மேலாக சிறையில் அடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.