சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்று திரும்பிய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்சியாக அவரை திறந்தவெளி வாகனம் மூலமாக அழைத்து செல்லப்பட்டார். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நேரடியாக நேருவிளையாட்டு அரங்கிற்கு அழைத்துச்சென்று அவருக்கு தேர்நீர் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார்.
உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதே முக்கியம். அடுத்தடுத்து ஏராளமான செஸ் தொடர்கள் வருகின்றன. வழக்கம்போல் பயிற்சி எடுக்க வேண்டும். மக்கள் திரண்டு நின்று அமோக வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கூறினார்.