திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோபி ஜார்ஜ் (52). இவர் கோட்டயம் ராமபுரம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ேஜாபி ஜார்ஜ் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராமபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு 3 மாடி கட்டிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ஜோபி ஜார்ஜ் மற்றும் தலைமைக் காவலர் வினீத் ராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.அந்தக் கட்டிடத்தில் 3வது மாடியிலுள்ள அறையில் சிலர் சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் ஜோபி ஜார்ஜ் அந்த அறையின் கதவைத் தட்டினார். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதையடுத்து ஜோபி ஜார்ஜ் காலால் கதவை எட்டி உதைத்தார். அப்போது அவர் தடுமாறி 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலியானார்.