புதுடெல்லி: கர்நாடகா முன்னாள் முதல்வர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி தற்போதைய முதல்வர் சித்தராமையா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தடையை மீறி பெங்களூருவில் கண்டன பேரணி நடத்தினார். இதையடுத்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டதுடன், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, சித்தராமையா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சட்டபிரிவு 141 செயல்படுத்துவது போன்ற எந்தவித குற்றச்சாட்டுகளும் கிடையாது. அதனால் சித்தராமையா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறது ’ என உத்தரவிட்டனர்.