தென்காசி: குற்றாலம் பஜாரில் உள்ள கடைகளில் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் 40 கடைகள் எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற திருக்குற்றாலநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயில் சன்னதி பஜார் பகுதியில் கடைகள் உள்ளன. நேற்று மதியம் சுமார் 2.45 மணி அளவில் கோயிலின் தென்பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் என்பவர் தனது பொம்மை கடையின் பின்புறம் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தார்ப்பாயில் தீப்பற்றியதாக தெரிகிறது.
காற்று காரணமாக தீ மளமளவென அருகிலுள்ள ஜவுளி மற்றும் டீக்கடைக்கும் பரவிய நிலையில் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடிக்க துவங்கியது. இதனால் பல அடி உயரத்துக்கு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 40 தற்காலிக கடைகள் எரிந்து சேதமானது. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது சீசன் டல்லாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. தகவலறிந்ததும் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.