ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கேப்டன் ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பிரப்சிம்ரன், தவான் இருவரும் பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் பந்திலேயே பிரப்சிம்ரன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஷார்ட் 1 ரன், ஜிதேஷ் 4 ரன் எடுத்து ஜான்சென் வேகத்தில் பெவிலியன் திரும்ப, பஞ்சாப் 22 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
தவான் – சாம் கரன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. சாம் 22 ரன் விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். பஞ்சாப் அணி 15 ஓவரில் 88 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து பரிதவித்தது. சக வீரர்கள் கை விட்டாலும், தனி ஒருவனாகப் போராடிய கேப்டன் தவான் பஞ்சாப் அணி கணிசமான ஸ்கோரை எட்ட உதவினார். பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது. தவான் 99 ரன் (66 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), மோகித் ரதீ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் மார்கண்டே 4, உம்ரான், ஜான்சென் தலா 2, புவனேஷ்வர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.