மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் வடதிருநள்ளார் ஸ்ரீ சனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில், இன்று மாலை 5.30 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. தற்போது, மகரராசியில் இருந்து, சனிபகவான் கும்பராசிக்கு இன்று பெயர்ச்சியாக உள்ளார்.
இந்த விழாவையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான பொது தரிசனம், சிறப்பு தரிசன வழிப்பாதைகள் அமைக்கும் பணி, பக்தர்கள் பரிகாரம் தீபம் ஏற்றுவதற்காக கூடம், நளன் குளத்தில் நீராடுவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் உடை மாற்றுவதற்கான அறைகள், தற்காலிக கழிவறைகள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் உள்ளிட்ட பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், சனி பெயர்ச்சி பலன்கள் குறித்த ஆன்மீக சொற்பொழிவு, யோகா மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை விரிவான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகள் காவல் துறையினர் ஆகியோரின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளது என கோயில் நிறுவனர் முருகையன் தலைமையிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.