திருக்கழுக்குன்றம்: வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலம் செல்ல வேண்டும் என்று உலக புலம்பெயர்வோர் தின விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல அறக்கட்டளை சார்பில், உலக புலம்பெயர்வோர் தின விழா கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவன இயக்குனர் வளர்மதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டு, விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், ‘வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த முகவர்கள் மூலம் வெளிநாடுகள் செல்ல வேண்டும். பதிவு அல்லாத போலி முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். முகவர்கள் இங்கு சொல்வது ஒன்று வெளிநாட்டில் நடப்பது வேறு விதமாக இருக்கும். ஆகையால், அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும்’ என்றார்.
இதில், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், விசிக காஞ்சி மற்றும் செங்கை மண்டல செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு, ஒன்றிய துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், அயலக தமிழர் நலத்துறை துணை இயக்குனர் ரமேஷ், புலம் பெயர்வோர் துறை அதிகாரி ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.