சேலம்: தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு தேர்தலிலும் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று காலை, சேலம் மாவட்டம் இடைப்பாடியில் உள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 171ம் எண் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, காலை 6.55 மணிக்கு வீட்டிலிருந்து மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோருடன், வீட்டருகே உள்ள வாக்கு மையத்திற்கு நடந்து வந்து வரிசையில் காத்திருந்த 15வது நபராக தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, ஜனநாயக கடமையாற்ற வேண்டும்,’’ என்று கேட்டுக் கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு மையத்திற்கு குடும்பத்தினருடன், தனது 8 வயது பேரன் ஆதித்தையும் உடன் அழைத்து வந்திருந்தார். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘சமீபகால தேர்தல்களில் வாக்களிக்கும்போது, பேரனையும் உடன் அழைத்துச் செல்வதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சென்டிமென்டாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கும் பேரனை வாக்குமையத்திற்கு உடன் அழைத்து வந்திருந்தார்,’என்றனர்.