Monday, May 13, 2024
Home » செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதி கிடைக்கவில்லை: சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தகவல்..!!

செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதி கிடைக்கவில்லை: சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தகவல்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் விசாரித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயவேல் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi