Saturday, July 27, 2024
Home » போதைப்பொருள் விற்பனையில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கண்டனம்!!

போதைப்பொருள் விற்பனையில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கண்டனம்!!

by Nithya

கடலூர்: தமிழ்நாட்டில் அதிகமாக போதைப்பொருள் இருப்பது பேசும் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கண்டனம்
அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கையாள முடியாமல் திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பழிபோடுகிறார். திமுக அரசை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

போதைப்பொருள் அதிகமாக இருப்பது குஜராத்தில்தான்: ஆர்.எஸ்.பாரதி
தமிழ்நாட்டில்தான் போதைப்பொருள் அதிகமாக இருப்பதை போல அண்ணாமலை பேசுகிறார். இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத்.

அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை: ஆர்.எஸ்.பாரதி
திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பதுபோல் எடப்பாடி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அதிமுக ஆட்சியில்தான் டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது குட்கா வழக்கு தொடரப்பட்டது. யாரோ ஒருவர் செய்ததற்காக ஒட்டுமொத்த திமுகவையும் குறை சொல்லக்கூடாது. அதிமுக ஆட்சியில் எத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள் மீது கூட அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் தவறுசெய்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி. பணியாளர்களை பழனிசாமி இழிவுபடுத்துகிறார்: ஆர்.எஸ்.பாரதி
போதைப்பொருள் விற்பனையில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவதாக பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை கூறுகிறார். ஐ.டி. பணியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பழனிசாமி பேசியுள்ளார்.
ஐ.டி. பணியாளர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும். போதைப்பொருள் வழக்கில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரையே அமித் ஷா பா.ஜ.க.வில் சேர்த்துள்ளார். தமிழ்நாட்டில் அதிக போதைப்பொருள் இருப்பது போன்ற தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எப்போதும் திமுக தயாராக உள்ளது. பழனிசாமி 2 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

ரூ.570 கோடியுடன் கன்டெய்னர் பறிமுதல் – நடவடிக்கை இல்லை: ஆர்.எஸ்.பாரதி
2016 தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் ரூ.570- கோடியுடன் கன்டெய்னர் பிடிபட்டது. ரூ.570 கோடி பணத்துடன் கன்டெய்னர் பிடிபட்ட நிலையில் 8 ஆண்டுகளாகியும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.

திமுக கூட்டணி தொடர்வதை அதிமுக, பா.ஜ.க.வால் பொறுக்க முடியவில்லை: ஆர்.எஸ்.பாரதி
2019-ல் அமைக்கப்பட்ட திமுக கூட்டணி தற்போது வரை தொடர்வதை அதிமுக, பா.ஜ.க.வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலை போல் அடிக்கடி தமிழ்நாடு வரும் மோடி, தமிழ்நாட்டின் | கோரிக்கைகள் பற்றி பேசுவதில்லை. இன்று மாலை சென்னையில் நடைபெறும் கூட்டத்திலாவது வெள்ள நிவாரணம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கை பற்றி பேச வேண்டும்.

கல்பாக்கம் ஈனுலை திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு
கல்பாக்கத்தில் பிரதமர் மோடி பார்வையிடும் ஈனுலை திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. ஸ்டெர்லைட்டை போல் மக்களை பாதிக்கும் எந்த திட்டமானாலும் திமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தி நிறுத்தும். மக்களுக்கு ஆபத்தான திட்டம் என்பதால்தான் கல்பாக்கம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை. குஜராத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ ஏன் ஈனுலை திட்டத்தை கொண்டு வரவில்லை? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்ச் 7-க்குள் தொகுதி பங்கீடு நிறைவடையும்: ஆர்.எஸ்.பாரதி
மார்ச் 7-ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடையும். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. நல்ல திட்டங்களை கொண்டு வந்து திமுக தடுப்பதை போல பிரதமர் மோடி, அண்ணாமலை பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

seventeen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi