* கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் தவிப்பு
* 5 மணி நேரத்துக்கு மேல் போராடி அணைத்தனர்
புழல்: செங்குன்றம் அருகே அதிகாலையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் மக்கள் தவித்தனர். செங்குன்றம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் தனியார் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் சுமார் 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். இங்கு பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து, பெரிய நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்ததும், வடமாநில தொழிலாளர்கள் குடோனில் தூங்கி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியானது. இதை பார்த்ததும் தூங்கிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அலறியடித்து எழுந்து, தீயை அணைக்க முயற்சித்தனர். அவர்களால் தீயை அணைக்க முடியாமல், அலறியடித்து வெளியே ஓடிவந்துவிட்டனர். சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. குடோனில் இருந்த கழிவு பொருட்கள் அனைத்தும் தீயில் வெடித்து சிதறின. தகவலறிந்து செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், ஆவடி உள்பட 7க்கும் மேற்பட்ட நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
குடோனை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கண் எரிச்சல், மற்றும் மூச்சுத்திணறலில் அவதிப்பட்டனர். வெளியில் இருந்தபடி குடோனில் பரவிய தீயை வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அதன் ஒருபக்க தடுப்பு சுவரை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து, குடோனுக்குள் புகுந்து, தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சியடித்தனர். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் தீயணைப்பு வீரர்கள் போராடி, குடோன் முழுவதும் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனாலும், குடோனில் அணைக்கப்பட்ட தீயிலிருந்து புகை வெளிவந்தபடி இருந்தது. தீ விபத்தில் அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அட்டை பெட்டிகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவினால் குடோன் தீப்பிடித்து எரிந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.