புழல்: செங்குன்றம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சோலையம்மன் நகர் பகுதி மக்கள், மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் ஆகியோருக்கு சாலையை சீர் செய்ய கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி தலைமையில் நடந்தது. இதில், ஒன்றிய குழு துணை தலைவர் வே.கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, துரைவேல், ஊராட்சித் துணைத் தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தார் சாலை போடுவதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி செயலர் லோகநாதன், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.