செங்கல்பட்டு:செங்கல்பட்டு புலிப்பாக்கம் பைபாஸ் சாலையில், டாஸ்மாக் கடை (எண் 4033) இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் அன்றைய கணக்கு சரி பார்த்துவிட்டு, வழக்கம்போல் இரவு 12 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். வழக்கம்போல், நேற்று மதியம் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது, கடையின் உள்ளே லைட் வெளிச்சம் தென்பட்டுள்ளது. இதனால், சந்தேகடைந்த அவர்கள் கடையை சுற்றி பார்த்தபோது, பக்கவாட்டு சுவற்றில் துளை போட்டு ரூ.3ஆயிரத்து 500 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
மேலும், போலீசார் கண்டு பிடிக்க முடியாமல் திணற வைக்க அங்கு இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, கடையின் ஷெட்டரை உடைக்க முடியாததால் பின்பக்கம் சுவற்றில் துளையிட்டு, கடைக்கு பின்புறம் ரயில்வே டிராக் வழியாக தப்பித்து சென்றதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, அக்கடை மேற்பார்வையாளர் செங்கல்பட்டு நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.