மீனம்பாக்கம்: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (57). இவர் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து சட்டவிரோதமாக ரகசியமாக விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் மேலப்பாளையம் போலீசாருக்கு தெரிந்தது. உடனே கடந்த பிப்ரவரி மாதம், போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கியது, மோசடி, சதி உள்ளிட்ட 5 பிரிவுகளில் காஜா மொய்தீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தீவிரமாக தேடினர். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டார். இதனால் காஜாமொய்தீனை தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தார். மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். காஜாமொய்தீனின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது. அவரை வெளியில் விடாமல், குடியுரிமை அதிகாரிகள் பிடித்து ஒரு அறையில் அடைத்தனர். பின்னர் திருநெல்வேலி மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காஜாமொய்தீனை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.