பெரம்பூர்: ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் சாலை நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் காலை பறக்கும் படை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது அதில் ரூ.68 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பைக்கில் வந்தவர் சூளை அஷ்டபுஜம் சாலை பகுதியைச் சேர்ந்த ராஜ்மால் சுதீர் (40) என்பது தெரிய வந்தது. இவர் சூளையில் மார்பில்ஸ் கடை நடத்தி வருகிறார். பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதனை பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.