Sunday, May 19, 2024
Home » எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை

எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை

by Kalaivani Saravanan

சென்னை: எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கக்கூடிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டமானது அமல்படுத்தப்படவிருக்கிறது. ரேஷன் கடைகள், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கக்கூடிய திட்டமானது செயல்படுத்தப்படவிருக்கிறது.

இந்த நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசி என்பது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அந்த திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடலூரை சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல தலசீமியா, அமீனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை மருத்துவர்கள் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அரிசி பையில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த 2 வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தலசீமியா, அமீனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படியே செறிவூட்டப்பட்ட அரிசி உண்ண வேண்டும் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கம் அளித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தவொரு அறிவியல் ஆய்வும் நடத்தாமல் அரிசி வாங்கக்கூடிய திட்டமானது செயல்படுத்தப்படுகிறது.

ஆய்வு ஏதும் நடத்தப்படவில்லை என்ற தகவல் நாடாளுமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த திட்டம் என்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும் கூட, எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்போகிறீர்கள்? அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள்? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi