சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்பவரிடம் வாங்கியிருந்த செல்போன் சார்ஜரை திருப்பி கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த மாணவியை கத்தி முனையில் மிரட்டி இளைஞர் தாஸ் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் உடல் ரீதியான உறவில் ஈடுபட வருமாறு மீண்டும் மீண்டும் அந்த மாணவியை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவரத்தை மாணவி தனது தாயிடம் கூறியதை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். விசாரணையில் தாஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்ற ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் தாஸுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுதவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அபராதத் தொகையுடன் சேர்த்து 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாணவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.