திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஊராட்சியில் அரசு பள்ளி கட்டிடம், சமுதாய கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம், எலிம்ஸ் நகர், சேண்ட்ரோசிட்டி, தண்டுமேடு, கிருஷ்ணாநகர், லட்சுமி நகர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில், அனாதின புறம்போக்கு நிலங்கள் சுமார் 122 ஏக்கர் உள்ளது.
எனவே, இந்த ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, சமுதாய கூடம், மற்றும் மாணவ, மாணவிகள் பொது மக்களின் வசதிக்காக விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், சுடுகாட்டுக்கு தேவையான இடங்கள் தேவைப்படுகிறது. அதே போல் பாப்பான்சத்திரம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாயந்த கோதண்டராமர் கோயிலை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது இடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, கோயில் கட்டுவதற்கும் இடம் தேவை. செம்பரம்பாக்கம் ஊராட்சியில் புறம்போக்கு அனாதின நிலங்கள் 122 ஏக்கர் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நிலத்தை ஒதுக்கிடு செய்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வின்சென்ட் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, வழக்கறிஞர் ஸ்ரீதர் மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.