திருவனந்தபுரம்: இந்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற அட்மிரல் ஆர்.ஹரிகுமார் திருவனந்தபுரத்தில் தன்னை பயிற்றுவித்த பள்ளி ஆசிரியை ஜமீலா பீவியை சந்தித்து ஆசி பெற்றார். இந்திய கடற்படை தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரிகுமார் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் பட்டம் ஆகும். பள்ளி முதல் கல்லூரி வரை இவர் திருவனந்தபுரத்தில் தான் படித்தார். திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள கார்மல் மேல்நிலைப் பள்ளியில் இவர் 8ஆம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற ஆர். ஹரிகுமார் தன்னை பயிற்றுவித்த கார்மல் பள்ளி ஆசிரியை ஜமீலா பீவியை சந்திப்பதற்காக பள்ளிக்கு வந்தார். அவருக்கு பள்ளி ஆசிரியைகளும், மாணவிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அட்மிரல் ஹரிகுமார் ஆசிரியை ஜமீலா பீவியின் காலைத் தொட்டு ஆசி பெற்றார். தான் படித்த வகுப்பறைகளையும் பார்வையிட்ட பின் அங்கிருந்து அவர் திரும்பினார்.